Friday, March 5, 2010

குணங்குடி அனீபா வழக்கு விசாரணை முடிவு& விடுதலைக்கு பிரார்த்திக்க வேண்டுகோள்





1997ம் ஆண்டு நடைபெற்ற இரயில் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக விசாரணை சிறைவாசியாக சிறையில் வாடிவரும் குணங்குடி அனீபா அவர்களின் வழக்கு விசாரணை கடந்த 02-03-2010 அன்று முடிவடைந்தது. வழக்கறிஞர்கள் புகழேந்தி, பா.ப. மோகன், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிரேம் குமார் 19.03.2010 அன்று வழக்கை ஒத்தி வைத்தார். அன்று இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் தமுமுக வழக்கறிஞர் ஜைனுல் ஆபிதீன் சிறையில சென்று குணங்குடி அனீபாவை சந்தித்தார். அப்போது த.மு.மு.க தனது விடுதலைக்காக எடுத்து வந்த முயற்சிகளை நினைவு கூர்ந்த அனிபா அவர்கள் தனது வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க கோரி தனது மனைவி மூலமாக தலைமை நீதிபதிக்கு மனு அளித்துள்ளதாகவும், விரைவில் தீர்ப்பு வெளிவந்து தானும், மற்ற சகோதரர்களும் விடுதலையாக எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அனைத்து சகோதரர்களையும் கேட்டுக் கொண்டார்.

இடுப்பு வலியால் நடக்க சிரமப்பட்டு கைத்தடி மூலம் நடந்து வந்த அனீபா அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று விரைவில் விடுதலையாக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒருவழியாக நீண்டகால விசாரணை இழுத்தடிப்புக்கு பின் வழக்கு விசாரணை முடிந்திருக்கிறது. அதே நேரத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னே தற்போதுள்ள நீதிபதியை மாற்றுவதற்கான வேலைகள் நடப்பதாகவும் தெரிகிறது. ஏற்கெனவே 6 நீதிபதிகள் மாறி 7வது நீதிபதியாக பிரேம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு நீதிபதி வரும் பட்சத்தில் குறைந்தது இன்னும் இரண்டு மாதங்கள் தீர்ப்பு தாமதமாகலாம். இது ஏற்கெனவே வேதனையில் இருக்கும் அனீபா குடும்பத்தினரையும், முஸ்லிம் சமுதாயத்தையும் காயப்படுத்துவதாக இருக்கும்.

உயர்நீதிமன்றத்தில் அனீபாவுக்கு பிணை கேட்டபோது இன்னும் ஒரு மாதத்தில் வழக்கை முடித்து விடுவோம் என அரசு தரப்பு சொன்னது. ஆனால் 4 மாதம் கழிந்துதான் விசாரணை நிறைவுபெற்றிருக்கிறது.

தீர்ப்பு வெளிவருவதிலும் தாமதம் ஏற்பட்டால் அது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகவே இருக்கும். தமிழக அரசு இந்த விசயத்தில் உரிய கவனம் செலுத்தும் என்று நம்புகிறோம்.

No comments :