Wednesday, January 12, 2011

108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள்..... இலவசமா? --

தமிழகத்தில் அவசரகால உதவிக்காக “108′ இலவச ஆம்புலன்ஸ் சேவை, 2008-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும், ஜி.வி.கே. அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையமும் (இ.எம்.ஆர்.ஐ.) கையெழுத்திட்டன. மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத்துறையுடன் இந்த சேவை இணைக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை, சென்னை மட்டுமில்லாமல் மாவட்டங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மாரடைப்பு, பெண்களுக்கு பிரசவ வலி, சாலை விபத்துகளில் அடிபடுவோர் என எந்த இடத்தில் இருந்தாலும் “108′க்கு அழைத்தால், இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது.

ஒருபக்கம் பொதுமக்களுக்கு இலவசமாக சேவை வழங்கிய போதிலும், “108′ இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது தொடர்பான விளம்பரங்கள் குறிப்பாக சன் மற்றும் கலைஞர் டிவிக்களில் கட்டணம் செலுத்தித்தான் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக அரசு 2008 முதல் 2010 வரை காலக்கட்டங்களில் சுமார் ரூ. 1 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம்:

கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ. 23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது.

கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?

பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“”ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு, தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதுபோலத் தான் நானும். என்னுடைய சுயநலத்தில், பொது நலமும் கலந்திருக்கிறது” என்ற “பராசக்தி’ பட வசனத்தைப் போல, தமிழக அரசின் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை பொது நலமாகப் பார்க்கப்பட்டாலும், இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை விளம்பரத்தின் மூலம் சன் மற்றும் கலைஞர் டிவிகளுக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைப்பது என்பது குடும்ப சுயநலம்தான்” என்கிறார் வி.சந்தானம்.

சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது!

No comments :