Monday, December 27, 2010

பெரியபட்டிணம் அருகே படகு கடலில் மூழ்கி 16 பேர் பலி



ராமநாதபுரம்.26:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியபட்டணம் பகுதியைச் சேர்ந்த சிலர் கடலில் உள்ள தீவுக்கு படகுகளில் சென்றபோது ஒரு படகு கவிழ்ந்தது. இதில் 12 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கீழ்க்கரே அருகே உள்ளது பெரியபட்டணம். இங்குள்ள மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு வசிக்கும் அனைவருமே முஸ்லீம் சமுதாயத்தினர் ஆவர்.தற்போது விடுமுறைக்காக வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், சீனி உருது என்பவரது குடும்பத்தினரும், ஆஸ்திரேலியாவில் இருந்து கடந்த வாரம் வந்திருந்த அவரது உறவினர்களும் சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

இன்று காலை அவர்கள் 2 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் பெரிய
பட்டிணத்திலிருந்து 7 கடல் மைல் தூரத்தில் உள்ள அப்பா தீவு மற்றும் முள்ளித்
தீவுக்குப் புறப்பட்டனர். ஒரு படகில் ஆண்கள் 20 பேரும் மற்றொரு படகில் குழந்தைகள் உள்பட பெண்கள் 20 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
தீவுக்கு சற்று தொலைவில் ஆண்கள் பயணித்த படகு சென்றபோது பின்னால் பெண்கள் வந்த படகை காணவில்லை. அந்த படகை தேடியபோது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெரியபட்டிணத்தில் உள்ள தங்களது உறவினர்கள் மற்றும்
மீனவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சுமார் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் புறப்பட்டனர். தீவை ஒட்டியுள்ள 4 பகுதிகளுக்கும் தனித்தனியாக பிரிந்து சென்ற அவர்கள் மாயமான படகை தேடினர்.

இந்த தகவல் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. உடனே கடலோர காவல்படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் தேடும் பணியை தீவிரப்படுத்தினர். மாயமான படகை தேடும் பணியில் ஹெலி காப்டரும், அதிநவீன ஹோவர் கிராப்ட் படகும்
ஈடுபடுத்தப்பட்டது.இதற்கிடையே மாயமான படகு பலத்த காற்று காரணமாக நடுக்கடலில் மூழ்கியது. அந்த பகுதிக்கு கடற்படையினர் விரைந்தனர். கடலில் மூழ்கி பிணமாக மிதந்த பரக்கத் (36), ஹபீப்நிஷா (38) உள்பட 9 பேரின் உடல்களை மீட்டனர்.மேலும் நடுக்கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 குழந்தைகள் உள்பட 11 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
அவர்கள் அனைவரும் பெண்கள். மீட்கப்பட்ட 8 பேருக்கும் தீவிர சிகிச்சை
அளிக்கப்படுகிறது.கடலில் படகு மூழ்கிய தகவல் கிடைத்ததும் பெரிய பட்டிணத்தை சேர்ந்தவர்கள் கடற்கரைக்கு திரண்டு வந்தனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை சட்டவிரோதமாக
யார் கடலுக்குள் அழைத்துச் சென்றது என்பது குறித்து விசாரித்து வருவதாக கடலோரக் காவல் படையின் டிஎஸ்பி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் பெரியபட்டணம் பகுதி பெரும் சோகமயமாக காணப்படுகிறது.

No comments :