Monday, May 3, 2010

பெல்ஜியத்தில் புர்கா தடை : பெல்ஜிய முஸ்லீம்கள் கடும் கண்டனம்

பெல்ஜியத்தில் முஸ்லீம் பெண்கள் தங்களை முழுமையாக மறைத்து கொள்ள பயன்படுத்தும் நிகாப் அல்லது புர்கா அணிய தடை விதித்து நேற்று பெல்ஜிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு உறுப்பினர்கள் மட்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மீதமுள்ள உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது தெரிந்ததே.

இதற்கு பெல்ஜிய முஸ்லீம்கள் பாதுகாப்பு எனும் பெயரில் தங்களை ஒடுக்கும் சதி என்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜூம்மா மசூதியில் தொழுகைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சாதாரண புர்காவில் இருந்த சவூத் பர்லாபி என்ற பெண் இதை விட முக்கிய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியதிருக்கிறது என்றும் முஸ்லீம்கள் அச்சத்திற்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் யாரேனும் நிகாப் அல்லது புர்கா அணிந்தால் சுமார் 20 - 25 யூரோக்கள் அபராதமும் 7 நாட்கள் வரை சிறைத்தண்டனையும் அளிக்கப்படும் என தெரிகிறது. சமீபத்தில் இஸ்லாத்தை தழுவிய சாமுவேல் புல்டே எனும் பெண்மணி பாதுகாப்பு காரணங்களுக்காக புர்காவை தடை செய்வதாக சொல்பவர்கள் பெல்ஜியத்தில் எத்துணை திருடர்கள் புர்கா அணிந்து திருடினார்கள் என்று பட்டியலிட முடியுமா என்று கேட்டார்.

மேலும் நாஜிக்கள் யூதர்களை அழிக்க யூதர்களை மஞ்சள் நட்சத்திரங்கள் அணிந்து கொள்ள நிர்ப்பந்தித்ததை போல் முஸ்லீம்கள் தங்கள் பின்னால் பிறைகளை அணிந்து கொள்ள நிர்ப்பந்திப்பார்களோ என்று அஞ்சுவதாக குறிப்பிட்டார். இத்தீர்மானத்தில் கலந்து கொள்ளாத புருனோ டைபின்ஸ் என்ற உறுப்பினர் இது மத சுதந்திரத்தை பறிப்பதாக கூறினார்.
கன்னி மேரியின் புர்காவை தடை செய்யாதவர்கள் ஏன் முஸ்லீம்களின் புர்காவை மட்டும் தடை செய்கிறார்கள் என முதியவர் ஒருவர் எதிர்ப்பு குரல் எழுப்பினார். முஸ்லீம்கள் தனிமைப்பட்டுள்ளதக உனரும் இந்நேரத்தில் இது போன்ற தடைகள் அவர்களை இன்னும் அந்நியப்படுத்தி விடும் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

No comments :