சென்னை `ஐஸ்அவுஸ்' தாக்குதலை கண்டித்து ராமநாதபுரத்தில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்: கல்வீச்சில் போலீசார் காயம் தி.மு.க. கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு ராமநாதபுரம், மே.16- ராமநாதபுரத்தில் நடந்த த.மு.மு.க. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டகாரர்கள் கல்வீசி தாக்கியதில் போலீசார் காயம் அடைந்தனர். ஆர்ப்பாட்டம் பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மத்திய சென்னை தொகுதியில் உள்ள ஐஸ் அவுஸ் வாக்குச்சாவடி பகுதியில் தி.மு.க.வினருக்கும் மனித நேய மக்கள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மனிதநேய மக்கள்கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு மனித நேய மக்கள் கட்சி மற்றும் த.மு.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம், இந்திய தவ்ஹித் ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தி.மு.க.வை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் திடீரென தி.மு.க. கொடியை தீயிட்டு எரிக்க முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீச்சு அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதில் பரமக்குடி சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியனுக்கு மண்டை உடைந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் காயம் அடைந்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர். அப்போது மாவட்ட செயலாளரும் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான சலிமுல்லாகான் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை அமைதிப்படுத்தினார். |
No comments :
Post a Comment