Thursday, June 23, 2011

அல்-ஹஸா கிளையில் தர்பியாவுடன் கூடிய தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டம்

அல்-ஹஸா கிளையில் தர்பியாவுடன் கூடிய தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டம்

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்-ஹஸா கிளையில் தர்பியாவுடன் கூடிய தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டம் கடந்த 17-6-2011ல் நடைபெற்றது.



இக்கூட்டத்தை அக்கிளையின் தலைவர் சகோ. முஹம்மது சுகர்னோ தலைமையேற்று துவங்கி வைத்தார். அதன்பின் அக்கிளையின் பொருளாளர் சகோ.ஜக்கரியா ஆலோசனையுடன் கூடிய வரவேற்புரை நிகழ்த்தினார்.

முதல் அமர்வின் தொடக்கமாக கிழக்கு மாகாணத்திற்கே உரித்தான தர்பியா நிகழ்ச்சியில் இஸ்லாம் கூறும் வாழ்வியல் ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் மண்டலப் பொதுச்செயலாளர் சகோ. சையது இஸ்மாயில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதில் இன்றைய காலகட்டத்தில் நம் சமுதாய மக்கள் நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் விதண்டாவாத மார்க்க அறிஞர்களை தங்களுக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மது, மாது, வீண்செலவுகள், போன்ற அனாச்சாரங்களில் சிக்கி நம் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இறைவன் யாரைப் பார்த்து 'இன்னக்க லஅலா குலூக்கில் அளீம்' நபியே நீங்கள் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர்கள் என்று கூறினானோ, மேலும் காஃபிர்கள் தங்களின் முழு எதிரியாக கருதிய போதிலும் அவர்களின் நற்பண்புகளைக் கண்டு 'அல்-அமீன்', 'அஸ்ஸாதிக்' என்று யாரை அழைத்தார்களோ அத்தகைய பண்புக்கு சொந்தக்காரரான நபி (ஸல்) அவர்களை நாம் நம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவில்லை, மேலும் வாழ்வில் ஒவ்வொரு சொல்லும் குர்ஆனை ஒத்தே இருக்கிறது என்ற சொல்லுக்குச் சொந்தகாரராகவும், நம் உயிரையும் விட மேலாக கருதும் அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாக வந்த உத்தம திருநபி அவர்களை தான் நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறைவனின் மிகப்பெரும் கிருபையால் நபி(ஸல்) அவர்களின் ஒவ்வொரு அசைவும் நமக்கு ஹதீஸ்களாக கிடைத்திருந்தும், நம்மில் பலர் இன்னமும் ஜாஹிலியாவில் தான் இருக்கிறார்கள். இறைநம்பிக்கை நமக்கு பரிபூரணமாக இருக்கவேண்டும் என்றால் நம்மிடம் நற்பண்புகள் இருக்க வேண்டும். நம்மிடம் நற்பண்புகள் இருந்தால் மட்டுமே சொர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க முடியும் என்று தனது தர்பியா உரையில் சகோ.இஸ்மாயீல் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து பெற்றோர்களுக்காக துஆச்செய்வோம் என்ற தலைப்பில் அல்-ஹஸா கிளையின் செயலாளார் சகோ.சஹாபுதீன் ஜும்ஆ உரையாற்றினார். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை, திருப்தியை ஒரு அடியானுக்குப் பெற்றுத் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பது அவன் தனது பெற்றோர்களைப் பேணுவதும், அவர்களுக்காக துஆ செய்வதுமாகும் என்று விளக்கினார்

இரண்டாம் அமர்வின் தொடக்கமாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் பேராசிரியர் சகோ.ஹாஜாகனி அவர்கள் தாயகத்திலிருந்து அலைபேசி வழியாக சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் இறைவன் தன் திருமறையில் கூறிய 'நிச்சயமாக கஷ்டத்துடனே தான் இலகு இருக்கிறது' என்ற வசனத்தை மேற்கோள் காட்டியவர் கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் படிப்பினைக்காக இறைவன் நமக்கு கஷ்டத்தைத் தந்தாலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இறைவன் தனது கருணையினால் இலகுவைத் தந்துள்ளான் என்று சிலாகித்தார்.

மேலும் இதுவரையில் இல்லாத கண்ணியம் நம் சமுதாயத்திற்கு சட்டமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி மூலம் கிடைத்திருக்கிறது என்று அகமகிழ்ந்த கவிஞர் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் நடந்த ஏழு நட்களில் ஆறு நாட்கள் தொடர்ந்து பேச வாய்ப்பளிக்கப்பட்ட ஒரே உறுப்பினர் நம் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்தான் என்றும். அவரின் உரைகள் அனைத்தும் சிறுபான்மை மற்றும் மீனவ சமுதாயத்தின் உரிமைக்குரலாக அமைந்ததையும் சுட்டிக் காட்டினார்.

மேலும் தாயகத்தைத் துறந்து சுட்டெரிக்கும் சூரியனையே திருப்பிச் சுடும் பாலைவனத்திலும் அலுவலகப் பணிகளுக்கிடையில் சமுதாய பணிகளை இடையறாது மேற்கொள்ளும் கிழக்கு மண்டல தமுமுகவினருக்கு நன்றி தெரிவித்தவர் நம் சமுதாயப் பணி சிறக்க சிறப்பான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 'மனித நேய மக்கள் கட்சியின் வளர்ச்சியில் நமது பங்கு' என்றத் தலைப்பில் மண்டலத் துணைபொதுச் செயலாளர் சகோ.அப்துல் அலீம் சித்தீக் சிறப்புரை நிகழ்த்தினார். அதில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் துவக்கத்திலிருந்தே முஸ்லிம்களின் பங்கை நினைவுபடுத்திய அவர் 1721ல் முதன் முதலாக இந்தியாவை அடிமைப்படுத்த நினைத்த போர்ச்சுகீஸியர்களை எதிர்த்து கடல் போர் புரிந்து சுதந்திர வேட்கைக்கு வித்திட்ட குஞ்சாலி மரைக்காயரையும் ஆங்கிலேயர்களை மிகவும் துணிவுடன் எதிர்த்த வஹாபிகளையும் நினைவுபடுத்தினார்.

அதன்பின் பாசிச சக்திகளின் சூழ்ச்சியினாலும் அவர்களின் முஸ்லிம் விரோத தொலைநோக்கு திட்டங்களினாலும் முஸ்லிம்கள் அடக்கு முறைக்கு தொடர்ந்து ஆளாகி இன்று வழிபாட்டுத் தளங்களையும், வாழ்வுரிமையையும் இழந்து வருவதை சுட்டிக்காட்டினார். இருந்தும் 1995ல் நம் சமுதாயத்தின் மானம் காக்கும் கேடயமாக உதயமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நம் சமுதாயத்தை வழி நடத்தி இளைஞர்களை செப்பனிட்டு அநியாயத்திற்கு எதிராக ஜனநாயக முறையில் குரல் கொடுத்து அதில் வெற்றியும் அடைந்து வருவதை சிலாகித்த நமது சிறப்புரையாளர் அரசியல் அரங்கில் அடிமைகளாக இருந்து வந்த முஸ்லிம்கள் தன்மானத்துடன் தலைநிமிர ஊன்றுகோலாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி உதயமானது என்றும் இன்றைய நமது வெற்றி நாம் இழந்த அரசியல் செல்வாக்கை மீட்டுத்தந்துள்ளது என்றார்.

மேலும் நாம் பண்பட்ட தலைவர்களை அடைந்திருக்கிறோம் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முழு இந்தியாவிற்கும் முன்மாதிரியாக விளங்கிறது என்றும் ஒருபோதும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அடிமையாகிடாமல் தன்மானத்தோடு, தனித்துவத்தோடு அரசியல் வானிலே பரிணமிக்கும் என்றும், 'பாரம்பரியமாக நாங்கள் திமுக' என்ற மாயையை உடைத்தெறிந்து தங்கள் உண்மை நிலையை நம் மக்கள் உணரவேண்டும் என்றும், மகாத்மா காந்தி போன்ற உலகத்தலைவர்கள் எல்லாம் வியந்து பாராட்டிய உத்தம நபி (ஸல்) மற்றும் உமர் (ரலி) அவர்களது பாரம்பரியத்தில் அரசியல் பயின்ற நாம்தான் பிறருக்கு அரசியல் கற்றுத்தர வேண்டும் என்றும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்தார்.

மேலும் பொறுப்போடு நமது சிறப்பான ஆலோசனைகளை வழங்கியும், நமக்கும் நமது இயக்கத்திற்கும் பாலமாக உள்ள மக்கள் உரிமையை தவறாது படித்து இயக்க விஷயங்களை நாமும் படித்து பிறருக்கும் எத்திவைக்க வேண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தடையின்றி தொடர்ந்து நடந்திட ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சமுதாயப் பணிகளில் தமுமுகவின் தனித்தன்மைகள் என்ற தலைப்பில் மண்டலத் துணைத் தலைவர் சகோ.அப்துல்காதர் சிறப்புரையாற்றினார். நம் சமுதாய மக்கள் வெறும் வாசனைத் திறவியங்களை மட்டும் பூசிக்கொண்டு தங்களின் உரிமையைக் கூட கேட்க தெரியாமல் நம் இஸ்லாமிய சமுதாயத்தின் பாரம்பரியத்தை அறியாமல்; அறிவிலிகளாகச் சுற்றித் திரிந்த காலத்தில் தான் 1992ல் நாம் பாபர் மசூதியை இழந்தோம். நமக்கு நடந்த இது போன்ற அநீதிகளை நாமே மறந்து கொண்டிருந்த வேளையில் தான் 1995ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தோன்றியது. இன்றுவரை பாபர் மசூதியை உலகரங்கில் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

மேலும் விழித்துக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் சமுதாய மக்களுக்காக உழைத்துக் கொண்டிருப்போம் என்ற வாசகத்தை தங்களின் தாரகமந்திரமாக்கி அதனை இன்றுவரை கடைபிடித்தும் வருகிறது. நம்முடைய உரிமைக்காக தமிழ்நாட்டில் கூட குரல் எழுப்ப தயங்கியபொழுது 2007ல் நம் சமுதாய வாழ்வுரிமையான இடஒதுக்கீட்டிற்காக இறைவனின் மாபெரும் கிருபையால் டெல்லியை திணறடித்தப் பெருமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தையே சாரும். தமிழகத்திலே சில நவீன அப்துல்லா பின் உபை-க்கள் இருந்தும் அவர்களின் சமுதாய துரோக சூழ்ச்சிகளுக்கடையில் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்ததும் தமுமுகவின் தனிச் சிறப்புகளில் ஒன்றாகும்.

மேலும் இறைவனின் மாபெரும் கிருபையால் 2009ல் உஹதுகளமாக நாடாளுமன்றத் தேர்தலை நாம் சந்தித்தாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இறைவன் நம்மை கண்ணியப்படுத்தினான் அதனால் இன்று சட்டமன்றத்தில் சிறுபான்மை மற்றும் மீனவர் சமுதாயத்தின் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் சமுதாயத்திற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் இஸ்லாமிய அடிப்படையில் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் மஷூரா செய்து (கலந்து ஆலோசித்தப்) பிறகே எடுக்கப்படுகிறது என்றும் இதுவே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்; தனிச்சிறப்புகளில் முதன்மையானதாக இருக்கிறது என்று சிலாகித்தார்.

இதனைத் தொடர்ந்து மண்டலப் பொருளாளர் சகோ.நஸ்ருத்தீன் ஆற்றிய சிற்றுரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இறைவனின் உதவியால் உணர்வுப்பூர்வமானத் தொண்டர்கள் பலத்திலேதான் சமுதாயப் பணிச் செய்து வருகிறது என்றும் எனவே புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் விஷயத்திலும் உறுப்பினர் அட்டைகளைப் புதுப்பிக்கும் விஷத்திலும் நாம் இன்னும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் நமது செய்திகளைத் தாங்கி வரும் நம் சமுதாய ஏடான மக்கள் உரிமையை மக்களிடம் சேர்க்க ஒவ்வொரு தொண்டனும் முயற்சிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அடுத்து நடந்த கேள்வி நேரத்தில், கூட்டத்தில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் கழக உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் மண்டலத் துணைத்தலைவர் சகோ.அப்துல்காதர் தெளிவுடன் அற்புதமாக பதிலளித்தார்;.

இறுதியில் அல்-ஹஸாக் கிளையின் துணைச்செயலாளர் சகோ.சிக்கந்தர் பாட்ஷாவின் நன்றியுரையுடன் இறைவனின் உதவியால் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

இக்கூட்டத்தில் மண்டலத் துணைச்செயலாளர்களான சகோ.அஸ்ரப்அலி, சகோ.சீனிமுஹம்மது மற்றும் அப்கெய்க் கிளைத்தலைவர் சகோ.அப்துல் மூமீன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு பயனுள்ள தகவல்களை தந்;த அருமையான கூட்டம் இது என்றும், சமுதாயப்பணியில் இதுவரை பட்டும்படாமலும் இருந்த நாங்கள் இனிமேல் எங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வோம் என்றும் அல்-ஹஸா மாநகரின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சகோதரர்கள் உறுதிபடத் தெரிவித்தார்கள்.

முகவை சீனிமுஹம்மது.

No comments :