Saturday, March 26, 2011

தி.மு.க. ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மணல் கொள்ளை: ஜவாஹிருல்லா


ராமநாதபுரம், மார்ச் 24: கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மணல் கொள்ளை நடந்திருப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லா வியாழக்கிழமை தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அதிமுக-வின் கூட்டணிக் கட்சியான மனித நேய மக்கள் கட்சி சார்பில் அக் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். ராமநாதபுரத்தில் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்குப் பின்னர் அவர் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் இலவச கலர் டி.வி. முழுமையாக வழங்கப்படவில்லை. மின்வெட்டு காரணமாக டி.வி.யை யாரும் பார்க்கவே முடியவில்லை. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைத் தருகிறோம் என்று சொல்லி விட்டு காய்கறிகள், பலசரக்கு சாமான்களும் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது. ஸ்பெக்டரம் ஊழல் தமிழக மக்களுக்கு உலக அளவில் மிகுந்த தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற காங்கிரஸ், திமுக அரசு தவறி விட்டது. 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கும் வகையில் இந்திய கடற்படை வலிமையிழந்து மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. கச்சத் தீவை மீட்பதுதான் எங்களது முக்கியக் கோரிக்கையாகும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடிக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ராமநாதபுரத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஆகியன முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. ராமநாதபுரத்தில் கடல் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும். சீர்கேடாக இருக்கும் ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை சீர்படுத்தப்படும். அரசே கேபிள் டி.வி. நடத்தும் என ரூ. 100 கோடி நிதி ஒதுக்கி அந் நிதி முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் பாழாகிப் போய் விட்டது. அதற்காக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியும் திமுக ஆட்சிக் காலத்தில் பழிவாங்கப்பட்டுள்ளார் என்றார் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா. பேட்டியின் போது, அதிமுக-வின் மாவட்டச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் சலிமுல்லாகான், செய்தித் தொடர்பாளர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

dinamani

No comments :