Sunday, February 5, 2012

இந்திய தூதரக அதிகாரிகளுடன் தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு!

சவுதி அரேபிய வரலாற்றில் முதன்முறையாக, ரியாதிலுள்ள இந்திய தூதரகம், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனைகளைப் பற்றி உரையாடுவதற்காக நிகழ்ச்சி ஒன்றை 02.02.12 ஏற்பாடு செய்திருந்தது.

தூதரக அதிகாரிகள் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ரியாத் மத்திய மண்டல நிர்வாகிகள் ஹுஸைன் கனி, நூர், ஆஷிக் உள்ளிட்டோரும், தம்மாமிலிருந்து பிலால், அஜ்மல் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அந்நிகழ்ச்சியில், த மு மு க கிழக்கு மற்றும் மத்திய மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு தாங்கள் அரேபிய மண்ணில் செய்து வரும் சமூக நலப்பணிகள் குறித்து எடுத்துக் கூறியதுடன், அதில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றைத் தீர்ப்பதற்கு இந்திய தூதரக அதிகாரிகள் மட்டத்தில் தேவைப்படும் ஆலோசனை மற்றும் உதவிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

தமிழக தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளை சுலபமாக எடுத்துரைப்பதற்கு வசதியாக, தமிழ் பேசும் ஊழியர்களை தூதரகம் நியமிக்க வேண்டும் என்றும், தொழிலாளர் ஒப்பந்த நகலை தூதரகம் பெற்று, அவை மீறப்படும் பட்சத்தில் சவுதி அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக, தொழிலாளர் பிரச்சனைகளான, ஹுரூப் (வேலைக்கு அமர்த்தியவரிடமிருந்து வெளியேறி விடுதல்) தொழிலாளர் ஒப்பந்தத்தை மீறுதல், குடியேற்ற/ குடிவிலக நடைமுறைகள் போன்ற முக்கியமான விடயங்கள் குறித்த கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

மேலும், சிறை அல்லது தடுப்புக்காவலில் உள்ள இந்தியர்களின் விடுதலை குறித்தும், அவர்களுக்கித் தேவையான சட்ட ஆலோசனைகளை அளிப்பது குறித்தும், தூதரகத்தில் இந்திய தொழிலாளர்கள் நலன் மற்றும் அவர்களின் வாக்குரிமை குறித்தும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன.

அத்துடன், கிழக்கு பிராந்தியத்தில், மிக அதிக அளவில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்திய தொழிலாளர்கள், தங்களது பிரச்சனைகளுக்காக ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக 800 கி.மீ பயணப்பட்டு வருவதை தவிர்க்க கிழக்கு பிராந்தியமான தம்மாமில் ஏன் ஒரு, துணை தூதரகத்தை அமைக்கக்கூடாது என்ற ஆலோசனையும் த மு மு க நிர்வாகிகளால் முன் வைக்கப்பட்டது.

த மு மு க நிர்வாகிகளின் கருத்துக்களை கவனமுடன் செவிமடுத்த தூதரக அதிகாரிகள், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், அத்துடன் த மு மு க நிர்வாகிகளும் தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாக தூதரக அதிகாரிகளுடன் ஒத்துழைத்து அவர்களின் பணியை சுலபமாக்க உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இறுதியாக இந்திய தூதரின் செயலாளர் திரு. மனோகர் ராம் த மு மு க நிர்வாகிகளுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காக நன்றி கூறினார்.

- அப்துல் காதர்

No comments :